ஒட்டுமொத்த இலங்கையையும் தமிழகத்திற்கு வழங்குங்கள் – அர்ச்சுனா

ஒட்டுமொத்த இலங்கையையும் தமிழகத்திற்கு வழங்குமாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தான் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளதாகக் குறிப்பிட்ட அர்ச்சுனா எம்.பி, தமிழ்நாட்டு மக்களுக்கும், தங்களுக்கு ஆதரவு தெரிவித்த தமிழக அரசியல் தலைவர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
“தமிழ்நாடு எங்களுடைய தமிழீழ தேசத்தை அங்கீகரிக்கிறது. தமிழக மண்ணில் கால் பதிக்கும் போதுதான், இன்னொரு அந்நிய நாட்டுக்கு வந்திருக்கிறோம் என்ற உணர்வே எங்களுக்கு ஏற்படுவதில்லை. முன்னர் நான் யாழ்ப்பாணத்தையும், மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு வழங்குமாறு கூறினேன். ஆனால் இப்போது, ஒட்டுமொத்த இலங்கையையுமே தமிழகத்திற்கு கொடுக்குமாறு கூறுகின்றேன்.”
காரணம் இங்கு தமிழன் அடக்கப்படுகிறான். ஊழல் நிறைந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை நோக்கிப் பயன்படுத்திய அவதூறு வார்த்தைகளுக்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தமிழ் மக்களின் வலிகளையும் தியாகங்களையும் திரள் நிதி (Fundraising) சேகரிப்பதற்காகப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.




